ஃபேஸ்புக் நிறுவனத்தின் டிஜிட்டல் கரன்சியான லிப்ரா, வரும் 2020-ல் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி என்பது பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனை ஆகும். தற்போது, பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சி உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது சொந்த கிரிப்டோகரன்சியை வரும் 2020-ல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகள் மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
புதிய கிரிப்டோகரென்சி தவிர புதிதாக கலிப்ரா என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் போன்று இயங்கும் சேவையை ஃபேஸ்புக் உருவாக்கி இருக்கிறது. கலிப்ரா ஃபேஸ்புக்கின் கிரிப்டோகரென்சியை சேமித்து வைத்துக் கொண்டு, அவற்றை அனுப்பவோ அல்லது பயன்படுத்தவோ வழி செய்யும். கலிப்ரா ஃபேஸ்புக்கின் மெசஞ்சர், வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் சேவைகளுடன் இணைக்கப்பட இருக்கிறது. மேலும், இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு சிறிய அளவிலான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சிகளின் மீதான மோகம் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த வகையான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, உலக வங்கி சேவையை உலுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.